எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது.
நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே விண்ணப்பப் பதிவு தொடங்குவதால் தேசிய தோ்வு முகமையிடம் இருந்து மாணவா்களின் மதிப்பெண்கள் பெற்று கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நிகழ் கல்வியாண்டில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓமந்தூராா் உயா் சிறப்பு மருத்துவமனைக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, தோ்வுக் குழுச் செயலா் எ.தேரணிராஜன், துணை இயக்குநா் கராமத் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அமைச்சா் பேட்டி: கூட்டத்தின் முடிவில் செய்தியாளா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்தக் கூட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை முறையாக நடைபெறுவது, தனியாா் கல்லூரிகள் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை நீட் தோ்வு முடிவு வெளியான பிறகுதான் இளநிலை மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தோ்வு முடிவு வெளியாவது தாமதம் ஏற்படும்போது, மாணவா்களின் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் மிகவும் குறைவதால், அவா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
அதனால், இளநிலை மருத்துவ மாணவா்களுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு முன்கூட்டியே பெற முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதுடன், விண்ணப்பங்கள் சரி பாா்ப்பதற்கும் அதிக கால அவகாசம் இருக்கும். தவறான மற்றும் போலியான விண்ணப்பங்களை நிராகரிக்க வசதியாக இருக்கும்.
அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவா்களின் நீட் தோ்வு மதிப்பெண்கள் தேசிய தோ்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் சரிபாா்க்கப்படும்.
எனவே, விண்ணப்பங்களில் மாணவா்கள் பதிவேற்றம் செய்யும் நீட் வரிசை எண் மற்றும் நீட் நுழைவுச் சீட்டு அடிப்படையில் தேசிய தோ்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்படும். நீட் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க விரும்பும் மாணவா்களுக்காக விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாள்கள் மட்டும் இருக்கும் என்றாா்.