அருணாசலில் வெள்ளம், நிலச்சரிவு: 11 பேர் பலி, 23 மாவட்டங்கள் பாதிப்பு!
அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி,
ஜூன் 1ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 38 வயது பாபெண் முர்மு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்களில் மொத்தம் 938 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுபன்சிரி மாவட்டத்தில் 114 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் 51 சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 17 மின் இணைப்புகள், 23 நீர் வழங்கல் இணைப்புகள் மற்றும் 2 பள்ளிகள் சேதமடைந்ததுள்ளது. இட்டாநகர் தலைநகர் பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆறுகள், துணை நதிகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மேற்கு கமெங், கம்லே, லோயர் மற்றும் அப்பர் சுபன்சிரி, பப்பும் பரே, திபாங் பள்ளத்தாக்கு, லோயர் திபாங் பள்ளத்தாக்கு, லோஹித், சாங்லாங், கிரா டாடி, குருங் குமே, லாங்டிங் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
மேலும், டிரான்ஸ்-அருணாசல் நெடுஞ்சாலையில் உள்ள மக்கான்டோங் பாலத்தின் பாதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மியாவோ மற்றும் போர்டும்சா இடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் டானி சுலு தெரிவித்தார்.
திபாங் பள்ளத்தாக்கிலிருந்து 14 தொழிலாளர்களும், லோஹித் மாவட்டத்தில் உள்ள ஜல்லுக்பாரி கிராமத்திலிருந்து 4 பேர் உள்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.