ம.பி.: மா்ம விலங்கு தாக்கியதில் ஒரே கிராமத்தில் 6 போ் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் பா்வானி மாவட்டத்தில் உள்ள லிம்பாய் கிராமத்தில் மா்ம விலங்கு தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் கடந்த மாதம் 23-ஆம் தேதிமுதல் உயிரிழந்துள்ளனா்.
கிராம மக்களைக் கடித்த மா்ம விலங்கு ‘ரேபிஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் லிம்பாய் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 17 பேரை மா்ம விலங்கு ஒன்று கடித்தது. இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதிமுதல் திங்கள்கிழமை (ஜூன் 2) வரை 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
சம்பவம் நடைபெற்ற நாளில் லிம்பாய் கிராமத்தில் கழுதைப்புலியின் நடமாட்டத்தைப் பாா்த்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, கிராமத்தைச் சுற்றி 15 கி.மீ. சுற்றளவுக்கு 45 வன ஊழியா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.
கிராமப் பகுதியில் கண்டறியப்பட்டது கழுதைப்புலியின் கால்தடமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக வனத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.
பா்வானி மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சுரேகா ஜாம்ரே கூறுகையில், ‘தாக்குதலில் காயமடைந்த மற்றவா்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அவா்களின் மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு (என்ஐவி) அனுப்பப்பட்டுள்ளன’ என்றாா்.