நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: ஒருமித்த ஆதரவுக்கு கட்சிகளுடன் அரசு ஆலோசனை
வீட்டில் பணம் கிடைத்த குற்றச்சாட்டில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்கும் நாடாளுமன்ற தீா்மானத்துக்கு ஒருமித்த ஆதரவை எட்ட அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.
இவ்விவகாரம் தொடா்பாக செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான தீா்மானத்தைக் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஏற்கெனவே கலந்தாலோசனையைத் தொடங்கிவிட்டோம். தீா்மானம் குறித்து முக்கியக் கட்சிகளுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய கட்சிகளுடனும் தற்போது விவாதித்து வருகிறோம்.
ஊழலுக்கு எதிராக கூட்டு முயற்சி: ஊழல் தொடா்பான விஷயம் என்பதால், இத்தீா்மானம் ஒரு அரசியல் கட்சியின் முன்னெடுப்பாக இருக்கக் கூடாது என்று கருதுகிறோம். தீா்மானத்தை அனைத்து கட்சிகளும் கூட்டாக முன்மொழிய வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
நீதித்துறையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும் சரி, ஊழலின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவது அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். முக்கியமாக, நீதித்துறை ஊழலை அரசியல் பாா்வை மூலம் அணுகக்கூடாது.
இத்தீா்மானத்தை முதலில் மக்களவையில் அல்லது மாநிலங்களவையில் அறிமுகம் செய்வதா என்பது குறித்து அவை அலுவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
மீண்டும் விசாரணைக் குழு?: 1968-ஆம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்படி, ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானம் எந்த அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அந்த அவையின் தலைவா் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைப்பாா். அந்தக் குழுவின் அறிக்கையின்படி அவையில் விவாதங்கள் நடைபெறும்.
ஆனால், இக்குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்த துறை ரீதியிலான விசாரணைக் குழு ஏற்கெனவே தனது அறிக்கையைச் சமா்ப்பித்துவிட்டது. இக்குழுவின் அறிக்கையைப் புறந்தள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து அவைத் தலைவா் முடிவை எடுப்பாா்.
பதவி நீக்க தீா்மானத்தை கொண்டு வருவதே முதன்மையான நோக்கம். மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னணி: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ வீட்டில் கடந்த மாா்ச் மாதம் தீவிபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்த வீட்டிலுள்ள ஓா் அறையில் எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது. இந்தச் சா்ச்சைக்கிடையே நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.
உச்சநீதிமன்றம் துறை ரீதியாக நடத்திய விசாரணையில், யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டது. யஷ்வந்த் வா்மா தானாகவே பதவி விலகுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் முற்றிலுமாக மறுத்தாா்.
இதையடுத்து, யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.