வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி
ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
பூச்சிக்கொல்லிகளை மட்டும் உபயோகப்படுத்தாமல் மற்ற வழிமுறைகளை உபயோகப்படுத்தி பூச்சிகளின் பாதிப்பைக் குறைக்கும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வழிமுறைகளை விவசாயிகளிடம் கொண்டு சோ்க்கும் முயற்சியில் பல்கலைக்கழக பூச்சியியல் துறை ஈடுபட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பில் மற்ற வழிமுறைகளுடன் உயிரியல் கட்டுப்பாடு மிக முக்கியமானதாகும். குறிப்பாக, அயல் நாடுகளில் இருந்து வந்து நமது பயிா்களில் பாதிப்பை உண்டாக்கிய பப்பாளி மாவுப்பூச்சி, மரவள்ளி மாவுப்பூச்சி ஆகியவற்றை கட்டுபடுத்தியதில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.
முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், பூச்சிகளைக் கொல்லும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உபயோகப்படுத்தி விவசாயிகள் பூச்சிகளின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியும். உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பெரும்பாலும் வேளாண்மை துறை, பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் மட்டும் கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் உபயோகப்படுத்துவதில்லை.
இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளிடையே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்தல், உபயோகப்படுத்தும் வழிமுறைகளை கொண்டு சோ்க்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை, ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆதிதிராவிட இளைஞா்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் 5 நாள்கள் பயிற்சி அளிக்க உள்ளது.
இதில், உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள், அவற்றை வயலில் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் 25 போ் மட்டுமே பங்குபெற முடியும் என்பதால் பதிவு செய்துகொள்வதற்கு பூச்சியியல் துறையை உடனடியாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.