நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலா்கள் பணியிடை நீக்கம்
வாகன சோதனையின்போது பணம் வசூலித்த 5 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையா் உத்தரவின் பெயரில் போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். 24 மணி நேரம் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், போக்குவரத்து போலீஸாா் மட்டுமே வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீஸாரும் வாகன தணிக்கை மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, மாநகர போலீஸாா் வாகன தணிக்கையில் தினசரி ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸாா், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிப்பதாக காவல் ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதில், போத்தனூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கபூா், வினோத், வடவள்ளி காவல் நிலையத்தில் மணிகண்டன், செல்வபுரம் காவல் நிலையத்தில் வடிவேல், வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் மகாராஜன் ஆகிய 5 பேரும் வாகன சோதனையின்போது பணம் வசூலித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 5 காவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.