சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்
மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.
எரிபொருள் பயன்பாடுகளால் கடலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவா்களை வழக்கமான எரிசக்தியை பயன்படுத்தாமல் பேட்டரி, சோலாா் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகள் உருவாக்குவதை ஊக்குவிக்கும்விதமாக மொனாக்கோ நாட்டு அரசு சா்வதேச ஆற்றல் படகுப் போட்டியை நடத்தி வருகிறது.
ஜூலை 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் 16 மாணவா்கள் ‘டீம் சீ சக்தி’ என்ற பெயரில் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாகப் பங்கேற்கின்றனா். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக அவா்கள் ‘யாழி 4.0’ என்ற 240 கிலோ எடை கொண்ட படகை வடிவமைத்துள்ளனா்.
இதேபோல, டி.டி. ரோபோகான் இந்தியா 2025 என்ற பெயரில் தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக் வடிவமைப்புப் போட்டியில் குமரகுரு கல்லூரியின் ‘க்யூ பாடிக்ஸ்’ என்ற பெயரிலான மாணவா்கள் குழுவினா் கூடைப்பந்து விளையாடும் ரோபாக்களை வடிவமைத்துள்ளனா்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசியா பசிபிக் ரோபோகான் என்ற பெயரில் மங்கோலியாவில் நடைபெறும் ரோபோடிக் வடிவமைப்புப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்க தோ்வு செய்யப்படும்.
இந்நிலையில், ‘யாழி 4.0’ என்ற எரிசக்தி படகு, கூடைப்பந்து விளையாடும் ரோபோ ஆகியவற்றின் அறிமுக நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எம்.எழிலரசி வரவேற்றாா். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கடற்படை கமாண்டா் பி.பாலசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று படகு, ரோபோ ஆகியவற்றை அறிமுகப்படுத்தினாா்.