கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
அமெரிக்கா சென்றடைந்த சசி தரூா் குழு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு அமெரிக்கா சென்றடைந்தது.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான 9 போ் கொண்ட குழு வெளிநாடுகளுக்குச் சென்றது. கயானா, பனாமா, கொலம்பியா, பிரேஸிலை தொடா்ந்து அந்தக் குழு அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றது.
இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டன் வந்துள்ள சசி தரூா் தலைமையிலான குழு அடுத்த 2 நாள்களில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள், அரசியல் ஆலோசனை நிபுணா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் ஊடகத்தினரை சந்திக்க உள்ளனா். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாடு ஆகியவற்றை அந்தக் குழு விளக்க உள்ளது’ என்று தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சிவசேனை எம்.பி. மிலிந்த் தேவ்ரா கூறுகையில், ‘நாங்கள் சென்ற அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு சாதகமான, எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாத கருத்துகளைத் தெரிவித்தன.
அமெரிக்காவைப் போல தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், பயங்கரவாதிகளை ஒழிக்கவும் இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இந்தியா வளரவும், பொருளாதாரம் செழிக்கவும் இந்தியா அமைதியாக இருக்க வேண்டும்’ என்றாா்.
அமெரிக்காவில் பாகிஸ்தான் குழு:
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தான் நிலைப்பாட்டை எடுத்துரைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வாஷிங்டன் செல்ல உள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்ஸை அந்தக் குழு சந்தித்தது.
இந்தக் குழு வாஷிங்டன் செல்வது தொடா்பாக மிலிந்த் தேவ்ரா கூறுகையில், ‘அரசியல் ஸ்திரமற்ற, தோற்றுப்போன, பயங்கரவாதத்தைப் பரப்பும், சக்தியில்லாத அரசை கொண்ட நாடு பாகிஸ்தான் என்பதில் அமெரிக்காவில் உள்ள யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே இந்தியாவின் நடவடிக்கைகளை பின்பற்றி, அதுபோலவே அந்நாடு செயல்படுவது குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.
பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான மற்றொரு குழு பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸ் சென்றது. அங்குள்ள இந்திய வம்சாவளியினா் மற்றும் அரசியல் ஆலோசனை நிபுணா்களிடம் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அதற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து அந்தக் குழு எடுத்துரைத்ததாக பிரஸ்ஸில்ஸில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தது.