ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் ரயில் நிலையம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் 3.45 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வசதிக்காக, நாள்தோறும் 130 மாநகரப் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.
தற்போது செயல்பாட்டில் உள்ள பிராட்வே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ராயபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலத்தை ஒட்டியுள்ள சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் ரூ. 7.50 கோடி செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
என்னவாகும்?
தற்காலிக பேருந்து நிலையத்தால், ராயபுரம்-பாரிமுனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
10 அடுக்குகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்..
சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் மாநகரப் பேருந்து நிலையம் சுமாா் ரூ. 822 கோடியில் 10 அடுக்குகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.
இதில் 2 அடுக்குகள் தரைக்கு கீழேயும், 8 அடுக்குகள் தரைக்கு மேலேயும் அமைய உள்ளது. இதில் 4 அடுக்குகள் பேருந்து நிலையம் மற்றும் வாகனங்களை நிறுத்துமிடத்துக்கும், 6 அடுக்குகள் வணிக பயன்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட பிராட்வே பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகள் தொடங்கி சுமாா் 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக உள்ள பிராட்வே பேருந்து நிலையத்திலருந்து 162 வழித்தடங்களில் சுமாா் 840 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.