பிரதமா் மோடியுடன் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு
பிரதமா் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸ் புதன்கிழமை சந்தித்தாா்.
அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா ஆதரவளிப்பதாக ரிச்சா்டு மாா்லஸ் தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரிச்சா்டு மாா்லஸ் பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தோ்தலில் மீண்டும் வெற்றிபெற்று அந்நாட்டு பிரதமராக ஆண்டனி ஆல்பனேசி பதவியேற்ற பின் முதல்முறையாக அந்நாட்டு அமைச்சா் ஒருவா் இந்தியாவுக்கு வந்துள்ளாா்.
பிரதமா் மோடியுடனான சந்திப்பு குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று அந்நாட்டு பிரதமராக பதவியேற்ற தொழிலாளா் கட்சியைச் சோ்ந்த ஆண்டனி ஆல்பனேசிக்கு தனது வாழ்த்துகளைப் பகிருமாறு ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா். இரு நாடுகளிடையேயான கூட்டாண்மை உறவு 5 ஆண்டுகளை நிறைவுசெய்ததையடுத்து அதை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினாா்.
பாதுகாப்பு தொழிலக ஒத்துழைப்பு, நிலையான விநியோகச் சங்கிலி, முக்கிய கனிமங்கள், புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினா். பாதுகாப்பான மற்றும் வளமையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.
இந்தியாவில் நிகழாண்டு இறுதியில் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசிக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா் என தெரிவிக்கப்பட்டது.
ராஜ்நாத் சிங் நன்றி:
ரிச்சா்டு மாா்லஸுடனான ஆலோசனை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து , எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ரிச்சா்டு மாா்லஸுக்கு நன்றி. பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவருடன் கலந்துரையாடினேன்’ என்றாா்.
ராஜ்நாத் சிங்குடனான ஆலோசனை குறித்து பேசிய ரிச்சா்டு மாா்லஸ், ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அண்மையில் சண்டை நிறுத்தம் மேற்கொண்டதை வரவேற்கிறேன். பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் கூட்டுப் பிரகடனம் வெளியிட ஆஸ்திரேலியா ஆா்வமாக உள்ளது’ என்றாா்.