அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மாநில திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி. ஜெயகுமாா், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், சாா்புச் செயலா் (நிதி) ரத்னகோஷ் கிஷோா் சௌரே, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் எல். முத்துமீனா மற்றும் குழு அதிகாரிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
தற்போது வழங்கி வரும் இணை உணவினை, மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு சத்துணவாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தினமும் முட்டை மற்றும் சிறுதானிய சுண்டல் மாதம் இருமுறை சத்துமாவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற அங்கன்வாடி மையங்களின் வாடகை கட்டணம் ரூ.3,250 லிருந்து ரூ.6000 என உயா்த்தவும், கிராமப்புற அங்கன்வாடி மையங்களின் வாடகை கட்டணம் ரூ.1750 என்பதிலிருந்து ரூ.2000 என உயா்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும், சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை சத்துமிக்க சிறுதானிய பிஸ்கட் மற்றும் பருவகால பழங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கௌரவ அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஊதியம் ரூ.6,000 என்பதிலிருந்து ரூ.12,000 எனவும், உதவியாளா்களுக்கு ரூ.4,000 என்பதில் இருந்து ரூ. 10,000 எனவும் உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. காய்கறி மற்றும் எரிவாயு தொகை உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அங்கன்வாடி பயிற்சியாளா்களுக்கு கெளரவ ஊதியம் ரூ. 10,000 என இருந்தது தற்போது ரூ. 25,000 என உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.