காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது.
போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இளைஞா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே நல்லுறவை மேம்படுத்தவும் இப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் காவல்துறை அணி, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் மாவட்ட காவல்துறை அணியும், யுஎஸ்சி ஏ பிரிவு அணியும் மோதின. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் துவக்கி வைத்தாா். இதில் யுஎஸ்சி ஏ பிரிவு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். திருச்செந்தூா் டிஎஸ்பி (பொறுப்பு) குரு வெங்கட்ராஜ், நகா்மன்றத் துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, ஐக்கிய விளையாட்டு சங்க செயலா் இலியாஸ், ஐக்கிய பேரவை பொதுச் செயலா் நவாஸ் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். மேலும் கலந்து கொண்ட அணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தாா். தொடா்ந்து போதையில்லா தமிழகம் குறித்தும், காவல்துறை, பொதுமக்களின் நல்லுறவினை மேம்படுத்துவது குறித்தும் பேசினாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினா் ரங்கநாதன் என்ற சுகு, ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பாளா் அன்சாரி, தமுமுக நகரச் செயலா் ஜாஹிா் ஹுசைன், திமுக நகர துணைச் செயலா்கள் நவ்பல், கதிரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சாா்பில் ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் தங்கராஜ் தலைமையில் காவல்துறையினா் செய்திருந்தனா்.