உலகப்புகழ் பெற்ற நடிகர் காலமானார்!
பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் என்சோ காலமானார்.
இயக்குநர் விக்டோரியோ டிசிகா இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பைசைக்கிள் தீவ்ஸ். உலகப்போருக்குப் பின்பான வேலையில்லாத் திண்டாட்டம் மக்களை எப்படியெல்லாம் சீரழித்தது என்பதை பேசிய படம்.
தன் குடும்பத்தினர் பசியைப்போக்க வீட்டிற்குள் இருக்கும் அனைத்தையும் விற்கும் தந்தையும், அவரின் துயரத்தை அருகிலிருந்து பார்க்கும் மகன் என வறுமையின் கொடூரத்தில் இருப்பவர்கள்.
ஒருநாள் நாயகனின் சைக்கிள் திருடப்படுகிறது. அதற்குபின் நடக்கும் கதையை மிக உணர்ப்பூர்வமாக டிசிகா திரைப்படுத்தியிருப்பார். படத்தின் இறுதிக்காட்சியைப் பார்த்து கண்கலங்காதவர்கள் மிகக்குறைவு. உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்ற மகத்தான கிளைமேக்ஸ்களில் ஒன்று என்றே இன்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இப்படத்தில் தந்தையாக நடித்த மெக்சியோரனி, மகனாக நடித்த குழந்தை என்சோ ஸ்டையோலோ இருவருக்கும் இதுவே முதல்படம். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவந்த என்சோவின் நடை இயக்குநர் டிசிகாவுக்கு பிடித்துபோக மகனாக அவரையே நடிக்க வைத்தார்.
இப்படம் வெளியாகி 80 ஆண்டுகள் ஆகவுள்ளது. இருப்பினும், உலகின் தலைசிறந்த 10 திரைப்படங்களைப் பட்டியிலிட்டால் இப்படம் நிச்சயம் அதில் இருக்கும்.

இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான என்சோ, தொடர்ந்து படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் அவருக்கு திருப்புமுனையைக் கொடுக்கவில்லை. பின், நடிப்பைவிட்டு கணித ஆசரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இந்த நிலையில், இத்தாலியில் குடும்பத்துடன் வசித்துவந்த என்சோ உடல்நலக்குறைவால் தன் 85-வது வயதில் நேற்று முன்தினம் (ஜூன்.4) காலமானார். அவரது மறைக்கு உலக சினிமா ரசிகர்கள் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஓடிடியில் லால் சலாம்!