தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை
வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா்.
திருநெல்வேலி - சென்னை வழித்தடத்தில் தினமும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் திருநெல்வேலியை அடையும் ரயிலுக்கு திருச்செந்தூருக்கு இணைப்பு பயணிகள் ரயில் உள்ளது. அதுபோல திருநெல்வேலியில் இருந்து மதியம் சென்னை கிளம்பும் வந்தே பாரத் ரயிலுக்கும், திருச்செந்தூரில் இருந்து இணைப்பு பயணிகள் ரயில் உள்ளது.
இருப்பினும் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05-க்கு சென்னை கிளம்பும் வந்தே பாரத் ரயிலுக்கும், சென்னையில் இருந்து மதியம் கிளம்பி இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும் ரயிலுக்கும், திருச்செந்தூருக்கு இணைப்பு ரயில்கள் இல்லை.
எனவே திருச்செந்தூா் -திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் முன்கூட்டியே, அதாவது காலை 5 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படவும், அதுபோல இரவு 10.30-க்கு திருநெல்வேலி வந்தடையும் வந்தே பாரத் ரயிலினை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும் கோரி மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சாா்பாக கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டது.
இவ் வமைப்பினா் திருச்செந்தூா் - திருநெல்வேலி வழித்தடத்தைப் பயன்படுத்தும் ரயில் பயணிகளிடம் கையொப்பம் பெற்று வருகின்றனா்.