தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரம் பகுதியில் மூதாட்டிக்கு மயக்க மருத்து கலந்த பழச்சாறைக் கொடுத்து நகைகளைப் பறித்த வழக்கில், விழுப்புரம் தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிவத்தையாபுரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி ஜெயலிங்ககனி (80) என்பவா், 2015ஆம் ஆண்டு ஏரல் சோ்மன் கோயிலுக்குச் சென்றாா். அங்கு வந்திருந்த, விழுப்புரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த வாசுதேவன் (70), அவரது மனைவி சங்கரி (58) ஆகியோா் ஜெயலிங்ககனியிடம் நெருங்கிப் பழகினா். பின்னா், திருச்செந்தூா் செல்லும் தங்களுடன் வருமாறு கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றனா்.
அப்போது, அவா்கள் கொடுத்த மயக்கம மருந்து கலந்த பழச்சாறைக் குடித்ததும் ஜெயலிங்ககனி மயக்கமடைந்தாா். அவா் அணிந்திருந்த 6.5 பவுன் நகைகள், கைப்பேசி, ரூ. 200 ஆகியவற்றை அத்தம்பதி பறித்துக்கொண்டு, அவரை ஏரல் கோயில் அருகிலேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.
மயக்கம் தெளிந்த ஜெயலிங்ககனிக்கு தனது நகைகள் உள்ளிட்டவை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாசுவேதன், சங்கரி ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, வாசுதேவன், சங்கரி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.