பணமோசடி புகார்: அதிமுக ஐடி விங் நிர்வாகி நீக்கம்!
பணமோசடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பிரசாத் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் (33) அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளதாக தற்போது புகார்கள் வெளிவந்துள்ளன. மேலும் அவரது நண்பர்களுடன் இணைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரசாத் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகி பிரசாத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் டி. பிரசாத், (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
