புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்ஷன் என்ன?
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாறி மாறி பரஸ்பரம் சாடி வருகிறார்கள்.
உக்ரைனில் இருந்து கடத்தி சென்ற குழந்தைகளை ரஷ்யா இன்னும் ஒப்படைக்காததுக் குறித்து சமீபத்தில் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது...
"ரஷ்யா 2 - 3 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'போர்க்களத்தில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நீக்கவேண்டும்' என்பது.

ரஷ்யர்கள் 'முட்டாள்கள்' என்று நினைக்கிறேன். போர் நிறுத்தத்திற்கான முக்கிய காரணம், உயிரிழப்புகளைத் தடுக்கத் தான். ஆனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள். அதனால், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலடி தருவதுப்போல, புதின், 'ஜெலன்ஸ்கி மீது எந்த நம்பகத்தன்மையுமே கிடையாது' என்று பேசியுள்ளார்.
இரு நாட்டு போர் நிறுத்தத்தில் மிகவும் முனைப்புடன் இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "சில நேரங்களில் இரண்டு குழந்தைகள் பைத்தியங்கள் போல சண்டைப் போட்டுக்கொள்ளும். இருவருக்கும் பரஸ்பரம் பிடிக்காது. அவர்கள் பார்க்கில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களை இழுக்க நினைத்தால், முடியாது. சில நேரங்களில், அவர்களை கொஞ்சம் சண்டைப் போட விட்டுவிட வேண்டும். அப்புறம் பிரிக்க வேண்டும்" என்று சமீபத்திய சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார்.