விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய விமானங்கள் வீழ்ந்தன!
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான விடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன.
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய தாக்குதலில் சிறுமி உள்பட இருவர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், போர் முடிவை எட்டவில்லை.
இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தச் சூழலில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா 100 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷியாவின் விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கான விடியோக்கள் காட்சிகள் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றன.
ரஷிய விமானப்படைத் தளங்களை நீண்ட தூர ஏவுகணைகளை வீசும் Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்கள் மூலம் வீசி உக்ரேனியப் படைகள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால், போர் தொடங்கியதிலிருந்து ரஷியாவின் ராணுவ தளங்கள் மீதான மிக முக்கியமான தாக்குதல்களில் ஒன்றாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ட்ரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இதையும் படிக்க: முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?