Makeup: ஆள் அடையாளம் தெரியாமல் திணறிய ஃபேஸ் ஸ்கேனர்: கண்டித்த விமான நிலைய அதிகாரி; நடந்தது என்ன?
ஒரு காலத்தில் மேக்கப் தேவை இல்லை இயற்கை அழகே அழகு எனப் பேசப்பட்டது. ஆனால், கால ஓட்டத்தில் மேக்கப் என்பது என் தனி உரிமை. அதை நான் விரும்பும் வகையில் போட்டுக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என உரிமைக் குரலாக மாறியது வரை வந்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப்பால் ஏற்படும் சங்கடங்களும் வரிசைகட்டுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் ஒரு பெண்ணிடம் விமான நிலைய அதிகாரி, ``ஃபேஸ் ஸ்கேனருக்கே அடையாளம் தெரியாத அளவுக்கா மேக்கப் அணிவீர்கள். உங்கள் பாஸ்போர்ட் புகைப்படம் போல ஸ்கேனர் உங்களை அடையாளம் காணும் வரை மேக்கப்பை அழியுங்கள்" எனக் கண்டிக்கிறார். வெட்கம் மிகுந்த முகத்துடன் அந்தப் பெண் மேக்கப்பை அகற்றுகிறார். இந்த சம்பவம் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் நடந்ததாக தெரிகிறது. இறுதியில் அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. சிலர் அந்தப் பெண்ணை கேலி செய்து பதிவிட்டனர். சிலர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பதிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல. பிளேபாய் நோர்வேயால் என்று அழைக்கப்படும் பிரேசிலிய மாடல் ஜனைனா பிரேசெரெஸ் சமீபத்தில் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டார்.
இவர் தன் உடலை அழகுப்படுத்தும் விதமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார். அதனால், அவரின் புகைப்படம் பாஸ்போர்ட்டில் இருப்பதுபோல இல்லை என்பதால், விமான நிலைய அதிகாரிகள் அவரை 40 நிமிடங்கள் காத்திருக்கச் செய்தனர்.
CASO FOI NA CHINA
— InfoMoney (@infomoney) May 29, 2025
Uma passageira no aeroporto de Xangai, na China, teve um problema entre sua aparência e a foto no documento no momento do embarque: o sistema de reconhecimento facial não conseguiu identificá-la devido ao excesso de cosméticos.
A mulher removeu a maquiagem com… pic.twitter.com/ozPErffKfe
இது தொடர்பாக பேசிய மாடல் ஜனைனா, ``மூக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அழகியல் அறுவை சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலர்களை (தோராயமாக ₹8.3 கோடி) செலவிட்டிருக்கிறேன். எனது தோற்றம் பல ஆண்டுகளாக நிறைய மாறிவிட்டதால், இது ஒரு கட்டத்தில் நடக்கக்கூடும் என்று எனக்கு தெரியும். இந்த சோதனையைத் தொடர்ந்து, உடனடியாக எனது பாஸ்போர்ட் புகைப்படத்தைப் புதுப்பித்தேன். நான் மீண்டும் அந்த வகையான சங்கடத்தை அனுபவிக்க விரும்பவில்லை." என்றார்.