பால்வினை தொற்று: `இதை மறைக்கக்கூடாது' - எப்படியெல்லாம் பரவும்? நிபுணர் விளக்கம்
உலகம் எவ்வளவுதான் அப்டேட் ஆகிக்கொண்டே இருந்தாலும் மக்களுக்கு ஒரு சில தலைப்புகளின் கீழ் அடிபடும் பேச்சுகளுக்கும், யூகங்களுக்கும் எண்ட் கார்ட் இல்லையென்றே சொல்லலாம். அதிலும் மருத்துவம் சார்ந்த கட்டுக்கதைகள் ஏராளம் ஏராளம். அதில் முக்கியமான ஒரு விஷயம், பால்வினை தொற்று. பால்வினை தொற்று என்பதற்கு, அதன் பெயரிலேயே பதிலும் இருக்கிறது. பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதால் ஏற்படும் தொற்று நோய்கள் என்பது பொருள். இந்தப் பால்வினை தொற்று பாதித்தவர்கள் மீது சுழலும் குற்றச்சாட்டுகளும் ஏராளம். பலருடன் உடலுறவில் ஈடுபட்டு இருப்பார்; அதனால்தான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்; இவரைத் தொட்டுப் பேசினாலே நோய் நமக்கும் பரவிவிடும் போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்டவர்களை ஒதுக்கி வைக்கும் சம்பவங்களும் இங்கு நிறைய!

உண்மையில் பலருடன் உடலுறவு கொண்டால்தான் பால்வினை தொற்று ஏற்படுமா; தொற்று நோய் பாதித்தவர்களைத் தொட்டாலோ, அருகில் இருந்தாலோ பிறருக்கும் அந்த நோய் பாதிப்பு ஏற்படுமா..? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர், டாக்டர் பரணி விஜயராகவன்.
''பால்வினை தொற்று (STD - sexually transmitted disease/ STI - sexually transmitted infection) என்பது, பாதுகாப்பற்ற உடலுறவால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று. இந்த பால்வினை தொற்றில், உலகெங்கிலும் 30-க்கும் மேற்பட்ட வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் பாக்டீரியாவால் பரவக்கூடிய சிபிலிஸ் (Syphilis), கோனோரியா (Gonorrhea), கிளமிடியா (Chlamydia) போன்றவையும்... வைரஸால் பரவக்கூடிய வகையில் எச்.ஐ.வி (HIV- human immunodeficiency virus), ஹெபடைட்டிஸ் - பி ( Hepatitis B), எச்பிவி (HPV-Human papilloma virus) போன்றவையும், பரவக்கூடியது மற்றும் மிகவும் ஆபத்தானதும் கூட.

பால்வினை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது ( சீழ் போன்ற ஏதேனும் மாறுபட்ட திரவம் வெளியேறுவது), அந்தரங்க உறுப்புகளில் புண்கள், கொப்புளங்கள் ஏற்படுவது போன்றவை பொதுவான அறிகுறிகள். பெரும்பாலான நேரங்களில் எந்த ஒரு வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமலேகூட, இதற்குக் காரணமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் ரத்தத்தில் பல்கி பெருகியிருக்கும்.
எச்.ஐ.வி மற்றும் ஹெபடைட்டிஸ்-பி போன்ற வைரஸ் தொற்றுகள் ஒருமுறை நம் உடலில் நுழைந்துவிட்டால் காலத்திற்கும் அது அப்படியேதான் இருக்கும். ஏன் இந்த தொற்றுகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றால், இவை உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனைக் குறைத்துவிடும். இதனால், பிற நோய்கள் எளிதில் சம்பந்தப்பட்டவர்களைத் தாக்குவதுடன், உடலின் பிற உறுப்புகளில் சிதைவு, செயலிழப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இதனால்தான் நோய் பாதித்தும் சிகிச்சை பெறாதவர்கள் வெகு சீக்கிரமே இறக்க நேரிடுகிறது. இவற்றுக்கெல்லாம் இப்போது நிறைய மருந்துகள் வந்துவிட்டன. அவை HIV வைரஸின் வீரியத்தைக்கூட குறைக்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை அது பாதிக்காததால் உயிரிழப்பும் குறைந்திருக்கிறது. முக்கியமாக, அந்த வைரஸ் பிறருக்கு பரவும் தன்மையையும் தற்போதைய சிகிச்சை முறைகள் குறைக்கின்றன.

பால்வினை தொற்று பாதித்தவர்களை தொடுவதால் நோய் பரவுமா என்றால், அப்படி எதுவுமே இல்லை. ஆனால், பால்வினைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தைத் தொடுவதாலும், தொற்றால் ஏற்பட்ட புண்களில் இருந்து கசியும் சீழ், திரவம் போன்றவற்றைத் தொடுவதாலும், இது பரவக்கூடும்.
பால்வினை தொற்றுகளுக்கான சிகிச்சை காலம் என்பது தொற்றின் வீரியத்தைப் பொறுத்தது. பாக்டீரியாவால் ஏற்பட்ட தொற்று எனில் 15 நாட்களுக்கு மருந்துகள் உட்கொண்டாலே குணமாகக்கூடும். சிபிலிஸ் போன்ற தொற்று பாதிப்பு இருந்தால், அது குணமாகும் வரை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இதே எச்.ஐ.வி போன்ற பாதிப்பு ஏற்பட்டால் காலம் முழுவதற்கும் சிகிச்சை பெற வேண்டும்.

பால்வினை தொற்று என்றாலே பாதுகாப்பற்ற உடலுறவுதான் காரணம் என்பது இல்லை. அது பல காரணங்களாலும் ஏற்படும். இதற்கு காரணம் தற்போது இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஊசியின் மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திக் கொள்கிறார்கள். பாலியல் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட ஊசியை பலரும் பயன்படுத்துவது; பால்வினை நோய் இருப்பது தெரியாமலேயே பலருடன் உடலுறவு கொள்வது போன்ற காரணங்களாலும் எச்.ஐ.வி அதிகரித்து இருக்கலாம்.
தற்போது டேட்டிங் ஆப், சமூக வலைத்தளங்களின் மூலம் பழகி தெரியாத நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அதுவும்கூட எச்.ஐ.வி பாதிப்பு அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கலாம்.
மக்கள் இந்த நோய்க்கு பயப்படுவதைவிட, நோய் வாய்பட்டால் இந்த சமூகம் அவர்களை சித்தரிக்கும் விதத்தைப் பார்த்துதான் அதிகம் பயப்படுகிறார்கள். அதனாலேயே அறிகுறிகள் இருந்தாலும் சோதனை செய்துகொள்ளவோ, சிகிச்சை மேற்கொள்ளவோ தயங்குகிறார்கள்.
உண்மையில் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் எச்.ஐ.வி பரிசோதனையாகட்டும், அதுதொடர்பான சிகிச்சைகளாகட்டும் அனைத்தும் ரகசியம் காக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களுடைய அனுமதியில்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்குக்கூட தெரிவிக்கமாட்டோம். ஆனால், அவர்கள் யாருடனெல்லாம் உடலுறவு வைத்துக்கொண்டார்கள் என்கிற தரவுகள் அவசியம். காரணம், அப்போதுதான் அவர்களுக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து மேலும் பரவுவதைத் தவிர்க்க முடியும். பால்வினை நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உடலுறவு வைத்துள்ளீர்கள் என்றாலோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வதும், உடலுறவின்போது காண்டம் பயன்படுத்துவதும் மிக மிக அவசியம்'' என்கிறார் டாக்டர் பரணி விஜயராகவன்.