மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242
திருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் ஆன தம்பதிகளில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் வருகிற பிரச்னையைப்பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசவிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

''அந்த நபர் நாற்பதுகளின் மத்தியில் இருப்பார். பலமுறை எங்கள் மருத்துவமனை வரை வந்துவிட்டு, உள்ளே வர சங்கடப்பட்டுக்கொண்டு சென்று விடுவாராம். என் அனுபவத்தில் இப்படிப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறேன்.
உங்கள் காய்ச்சல் சரியாக அதற்கான மருத்துவரைப் பார்ப்பதுபோலதான், பாலியல் பிரச்னைகளுக்கு ஒரு பாலியல் மருத்துவரை சந்திப்பதும்.
விஷயத்துக்கு வருகிறேன். நன்றாக சென்றுகொண்டிருந்த தாம்பத்திய வாழ்க்கை சில வருடங்களாக கொஞ்சம்கூட மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் அவருடைய பிரச்னை.
விசாரித்ததில், அவருடைய இரண்டு மகள்களும் டீன் ஏஜில் இருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகள்களுடன் உறங்க ஆரம்பித்திருக்கிறார். இவர் ஹாலில்.
மகள்கள் குழந்தைகளாக இருந்தவரை, கணவன் - மனைவி இருவருமே வாரத்தில் பல நாள்கள் தாம்பத்திய உறவு கொண்டிருக்கிறார்கள்.
நான், பல கட்டுரைகளில் குறிப்பிடுவதுபோல இது மிக நல்ல விஷயம். ஒரு தாம்பத்திய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், மகள்கள் வளர்ந்தபிறகு அவருடைய மனைவி, 'பிள்ளைங்க திடீர்னு முழிச்சிக்கிட்டா அசிங்கமாகிடும்; பிள்ளைங்க கதவை திறந்துட்டு திடீர்னு வெளியே வந்துட்டா; அதுங்க கண்ல ஏதாவது தப்பா பட்டுட்டா வழி மாறிப் போயிடுங்க' என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார்.
உறவையும் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். விளைவு, கணவனும் மனைவியும் மாதக்கணக்கில் உறவுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது கணவன் - மனைவிக்குள் பிரச்னையாக எழ ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பெட்ரூமில், கணவன் - மனைவியைத் தவிர, ஒரு வளர்ந்த குழந்தை இருந்தாலும் அதை கூட்டம் என்றே சொல்வேன் நான்.
ஒருகட்டத்தில், மனைவிக்கு உடலில் ஏதோ பிரச்னை; அவளுக்கு செக்ஸில் விருப்பமில்லாமல் போய்விட்டது; தன்னை வெறுக்கிறாள்; அதனால்தான், மகள்களின் மேல் பழியைப் போட்டு தன்னைத் தவிர்க்கிறாள் என நினைக்க ஆரம்பித்திருக்கிறார். கூடவே, தான் பல மாதங்கள் உறவே இல்லாமல் இருப்பதால், தன்னுடைய ஆண்மைக் குறைந்துக்கொண்டிருக்கிறது என்றும் நம்ப ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் என்னை சந்திக்க வந்திருந்தார்.
பரிசோதனை செய்துபார்த்ததில், அவர் நினைத்துக்கொண்டிருந்ததுபோல அவருக்கு பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை, வயதுக்குரிய சின்னச்சின்ன பலவீனங்களைத் தவிர்த்து.

அதற்கான சிகிச்சைகளை மட்டும் அளித்துவிட்டு, உடனடியாக, இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டுக்கு மாறுங்கள். உங்களுடைய பிரச்னை தீர்ந்துவிடும் என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
ஒரு பெட்ரூமில், கணவன் - மனைவியைத் தவிர, ஒரு வளர்ந்த குழந்தை இருந்தாலும் அதை கூட்டம் என்றே சொல்வேன் நான். பிள்ளைகள் வளர்ந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியறையில் உறங்க ஆரம்பியுங்கள். அதுதான், உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.