தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!
சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.
பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு
பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருள்களும் மாணவா்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் கொண்டு மாணவா்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா் பயிற்சி, அட்டவணை உயா்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய 2025-2026 கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடவுள்ளது.