குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!
குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 26 கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,
கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவியருக்கு இன்று சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 1,187 பள்ளிகளிலும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து நம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் முழுமையான கணக்கு தெரியவரும். ஆனால் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஜூன் இறுதி வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மாத இறுதியில்தான் மொத்தமான மாணவர்களின் எண்ணிக்கை தெரிய வரும்.
அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது. இதுபோன்று நடைபெறுவதாக தகவல் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அதற்கான அறிவுரை வழங்கி இருக்கிறோம்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லதுதான். மருத்துவமனை வளாகத்திற்குள் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று கூறினார்.