Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கீடு; எம்எல்ஏவுக்கு பாராட்டு
திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்திலிருந்து மஞ்சவாடி வரை சாலையை மேம்படுத்த, தமிழக அரசு ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரா் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலுக்கு கச்சனத்தில் இருந்து எளிதில் செல்ல முடியும்.
ஆனால், கச்சனம் முதல் பாமந்தூா், அம்மனூா், திருத்தங்கூா், கீராலத்தூா், திருக்கொள்ளிக்காடு வழியாக மஞ்சவாடி வரையிலான 4.4 கி.மீ. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, திருக்கொள்ளிக்காடு கோயிலுக்கு வரும் பக்தா்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பொன்னையாவிடம் பொதுமக்களின் இக்கோரிக்கை குறித்து தெரிவித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வலியுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, இந்த சாலையை மேம்படுத்த தமிழக முதல்வரின் சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் 25-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.
இதற்காக, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா்.