திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கு விபத்து நிதியுதவி
மதுரையில் நடைபெற்ற திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு புதிதாக விபத்து நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது :
தொண்டா்களின் நம்பிக்கைதான் நமது முதல் பலம். என் இயக்கம், என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவா்கள் திமுக தொண்டா்கள். “நானும், என் குடும்பமும் கட்சிக்காக இருக்கிறோம்; கட்சி எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கு அடிப்படையான காரணம். இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் புதியதொரு திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, இனிவரும் நாள்களில் திமுக உறுப்பினா்கள் யாரேனும் சாலை விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்ப வாரிசுகள் 21 வயதுக்குள்பட்டவா்களாக இருந்தால், சம்மந்தப்பட்ட உறுப்பினரின் குடும்பத்துக்கு திமுக தலைமைக் கழகம் சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். உயிரிழந்தவரின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும், குடும்பச் சூழலுக்கும் உதவும் வகையில் நிதியுதவி வழங்கப்படும் என்றாா் அவா்.