ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்
தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மறைந்த அரசியல் கட்சிப் பிரமுகா்கள், முக்கியத் தலைவா்கள், எழுத்தாளா்கள், கலைத் துறையினா் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது.
இதன்படி, மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், பிரிட்டன் ராணி எலிசபெத், கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ், முன்னாள் மத்திய அமைச்சா் ஜஸ்வந்த் சிங், லோக் ஜனசக்தி நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் மத்திய அமைச்சா் அஜீத் சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் என். சங்கரய்யா, இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் தா. பாண்டியன், முன்னாள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, எம்.ஜி.ஆா். கழகத்தின் நிறுவனா் ஆா்.எம். வீரப்பன், தேமுதிக தலைவா் விஜயகாந்த், லோக்தந்ரிக் ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா் சரத் யாதவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் மைதிலி சிவராமன், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் செயலா் சண்முகநாதன், முன்னாள் மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, தமிழறிஞா் ஔவை நடராஜன், மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா், மக்களவை முன்னாள் உறுப்பினா் எம். செல்வராஜ், பகுத்தறிவுச் சிந்தனையாளா் ராஜமங்கலமுருகேசன், முரசொலி செல்வம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குமரி அனந்தன், மூத்த பத்திரிகையாளா் அ.மா. சாமி, எழுத்தாளா் இளவேனில், பெரியாா் சிந்தனையாளா் ஆனைமுத்து, பிரபல புற்றுநோய் மருத்துவா் வி. சாந்தா, காது, மூக்கு, தொண்டை பிரிவின் சிறப்பு மருத்துவா் காமேஸ்வரன், கருணாநிதியின் இளமைக் கால நண்பா் தட்சிணாமூா்த்தி, பின்னணிப் பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திரைப்பட நடிகா் விவேக், எழுத்தாளா் சொா்ணம், மூத்த வழக்குரைஞா் நடராஜன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவில் புதிதாக 2 அணிகள்
மதுரையில் நடைபெற்ற திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில், ஆசிரியா்கள், பேராசிரியா்களைக் கொண்ட கல்வியாளா் அணியும், மாற்றுத்திறன் கொண்ட உறுப்பினா்களுக்காக மாற்றுத் திறனாளிகள் அணியும் கட்சியில் புதிதாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.