No Tobacco Day: `உயிர் கொல்லும் புகையிலைக்கு நோ சொல்வோம்' - உலக புகையிலை ஒழிப்பு தினம் 2025
'புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்' இந்த வசனத்தை கேட்காத யாரும் இங்கே இல்லை. இருந்தும் இந்த வாக்கியத்தின் முக்கியத்துவத்தை அறியாத பலரும் இன்னும் இந்த புகையிலையை பயன்படுத்த தான் செய்கின்றனர்.
காணும் அனைத்திலும் நவீனத்தை புகுத்து மனிதர்கள் புகைப்பழக்கத்திலும் சிகரெட்டிலிருந்து குட்கா , பான் மசாலா, ஈ சிகரெட் என நவீன முறையில் தன் ஆயுள் காலத்தை விலை கொடுத்து குறைக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2000ம் ஆண்டு உலகம் முழுவதும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 33.3% இல் இருந்து 2018 ஆம் ஆண்டு 23.6% ஆக குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை புகையிலை பயன்பாட்டில் உலக அளவில் இரண்டாவது இடத்திலும் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நிக்கோட்டினா டபாகம்(nicotina tabacum) என்னும் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் புகையிலையில் நிக்கோட்டின் என்னும் மூலக்கூறு உள்ளது. இந்த நிக்கோர்டினா பயன்படுத்துவோரை அடிமைப்படுத்துகிறது. ஒரு சிகரெட்டில் சுமார் 10 -14 mg நிக்கோட்டின் உள்ளது. இதில் 1- 1.5mg புகை பிடிப்பதன் மூலமாக உடலை பாதிக்கிறது.
மேலும் புகையில்லா புகையிலை பயன்படுத்துவதால் பாதிப்பு குறைவு என்று எண்ணி பயன்படுத்தப்படும் புகையிலை பொடி, குட்கா, ஜர்தா ,கைனி போன்றவை சிகரெட்டை காட்டிலும் அதிக ஆபத்தானவை. ஒரு நாளைக்கு 8-10 முறை பயன்படுத்தும் புகையில்லா புகையிலை உடலில் ஏற்படுத்தும் நிகோட்டின் அளவு 30-40 சிகரெட்டை ஒரு நாளில் பயன்படுத்துவதற்கு சமம்.
மேலும் புகை பிடிப்பவர்களை காட்டிலும் அவர்களை சுற்றியுள்ள நபர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் (passive smoker) அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

புகைப்பிடிப்பதால் வாய் புற்றுநோய் வாய் மியுக்கோசில் புண்கள், ஈறு நோய்கள் ,உமிழ்நீர் சுரப்பிகள் செயலிழப்பு மற்றும் பல் சொத்தை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வாய் புற்றுநோயில் மூன்றில் ஒரு பங்கு புகையிலை பழக்கத்தினால் ஏற்படுகிறது.
புகையிலையில் உள்ள கார்சினோஜென்களே இதற்கு காரணம். புற்றுநோயின் முன்னிலைகளான லுகோபிளாக்கியா, எரித்ரோபிளாக்யா ,நிக்கோட்டின் ஸ்டொமாடிடிஸ் போன்றவை தொடரும் புகையிலை பழக்கத்தினால் புற்றுநோயாக உருமாறும். புகைப் பழக்கத்தால் உமிழ்நீர் சுரப்பிகள் சேதம் அடைந்து பல் சொத்தை, வாய் துர்நாற்றம், பற்கறைகள் போன்றவை ஏற்படுகிறது.
மேலும் இதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை ஏற்பட்டு பயன்படுத்துவோரை பல தொற்றுகளுக்கு எளிதில் ஆளாக்குகிறது. புகையிலையை எந்தவிதத்தில் உட்கொண்டாலும் ஏற்படும் பாதிப்பு ஒன்றுதான்.

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த இயலாது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
புகையிலை பயன்பாட்டை நிறுத்தி வாழ்வை மேம்படுத்தும் வழிகள் பல உள்ளன. புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து புகைபிடிக்கும் எண்ணம் தோன்றும்போது மனதை திசை திருப்ப வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம். எடுத்துக்காட்டிற்கு உடல் பயிற்சி, சத்தான உணவு பழக்கம் போன்றவை மேலும் புகையிலை பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகி இருந்து, புகையிலை நிறுத்தும் மையங்கள் மூலமாக ஆலோசனை பெற்று புகையிலை பழக்கத்தை நிறுத்தலாம்.
- ம. நந்தினி தேவி
3year-BDS
சி. எஸ். ஐ பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
மதுரை