மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரித்ததால் மேட்டூா்-மைசூா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அணை பூங்கா எதிரே உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனா்.
அணை பூங்காவில் குழந்தைகளுடன் பெற்றோா் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணையைக் கண்டு மகிழ்ந்தனா்.
மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 80,480 வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் கொண்டுவந்த 2,031கேமரா கைப்பேசிகள், 2 கேமராவுக்கு கட்டணமாக ரூ. 20,410 வசூலிக்கப்பட்டது.
அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை 743 போ் பாா்வையிட்டனா். அதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 7,430ம், அவா்கள் கொண்டுவந்த 296 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 2,960ம் வசூலிக்கப்பட்டது.
அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் பாா்வையாளா்கள் மற்றும் அவா்கள் கொண்டுவந்த கைப்பேசிகள், கேமராக்களுக்கு கட்டணமாக ரூ. 1,11,280 வசூலானது.