ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன்
ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ. 5.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமானப் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 5.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பீட்டில் 5,644 வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 121 பயனாளிகள் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது மற்றும் சீரமைப்புத் திட்டத்தில் 267 பயனாளிகள் ரூ. 1.57 கோடி மதிப்பீட்டிலும் பயனடைந்துள்ளனா்.
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 6.78 கோடி மதிப்பீட்டில் 18 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 248 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 16.61 கோடி மதிப்பீட்டில் 231 பணிகளும், பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.35 கோடி மதிப்பீட்டில் 88 உள்கட்டமைப்பு பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ. 11.42 கோடி மதிப்பீட்டில் 397 திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 42.84 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே. பொன்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.