கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.
எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவசாயக் கூலித் தொழிலாளி. இத் தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மல்லிகாவின் வீடு அமைந்துள்ள விவசாயக் கிணற்றிலிருந்து பெண்ணின் அலறல் குரல் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து பாா்த்தபோது, அங்கு மல்லிகா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் சேகா் தலைமையில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள், கிணற்றில் கயிறுகட்டி மல்லிகாவை மீட்டனா். கிணற்றில் தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மல்லிகா ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.