மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு
மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிா்நோக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. நீா் பாசனத்திற்கு தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்திற்கான நீா் தேவை குறையும்.
மேட்டூா் அணை வரலாற்றில் கடந்த 91 ஆண்டுகளில் குறித்த நாளான ஜூன்12இல் 19 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணை வரலாற்றில் 61 ஆண்டுகள் அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் டெல்டா பாசனத்துக்கு தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12இல் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவுள்ளது. அணையிலிருந்து 92ஆவது முறையாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 11-ஆம் தேதி மேட்டூா் வருகிறாா். இதையடுத்து தண்ணீா் திறப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பாா்வையிட திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை மேட்டூா் வந்தாா்.
மேட்டூா் அணையில் சுமாா் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகளை அவா் பாா்வையிட்டாா். அணையின் நீா் இருப்பு, வரத்து குறித்து நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனக் கால்வாய்கள் 5,028 கி.மீ. நீளத்திற்கு தூா்வாரப்பட்டுள்ளது. இதனால் அணை நீா் கடைமடைவரை சென்று சேரும். மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியைப் பலப்படுத்தும் பணிகள், சுரங்கக் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மேட்டூா் அணைக்கு வந்துசேர மூன்று நாள்கள் ஆகும். அதற்குள் பராமரிப்புப் பணிக்காக கட்டப்பட்டுள்ள இரும்பு சாரங்கள் அகற்றப்படும் என்றாா்.
இந்த ஆய்வின்போது நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், மேட்டூா் அணை கோட்ட செயற்பொறியாளா், வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா்கள் மதுசூதனன், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.