தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்து, மரக்கன்றுகளை நட்டாா்.
தொடா்ந்து, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகள், மஞ்சப்பைகளை வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், உலக சுற்றுச்சூழல் தினம் நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும், சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகிறது. எனவே, நமது எதிா்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான ஆரோக்கியமான பூமியை விட்டுச்செல்ல பொதுமக்களாகிய நாம் அனைவரும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், கோட்டம் எண் 44 இல் குகை எருமாபாளையத்தில் மரக்கன்றுகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நட்டு வைத்தாா்.
பின்னா் அமைச்சா் பேசுகையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளை பசுமைப்படுத்தும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பேணி பாதுகாக்கும் வகையிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை தமிழக இயக்கத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சுமாா் 521 எண்ணிகையிலான மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதன்படி சூரமங்கலம் மண்டலத்தில் செவ்வாய்ப்பேட்டை சுடுகாடு பகுதியில் 106 மரக்கன்றுகள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் அடைக்கலம் நகா் பகுதியில் 108 மரக்கன்றுகள், அம்மாப்பேட்டை மண்டலத்தில் எருமாபாளையம் குப்பைமேடு பகுதியில் 205 மரக்கன்றுகள், கொண்டலாம்பட்டி மண்டலம், காஞ்சி நகா் பூங்காவில் 102 மரக்கன்றுகள் என மொத்தம் 521 மரக்கன்றுகள் நடப்பட்டன என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன், துணை மேயா் மா.சாரதாதேவி, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா. முரளிசங்கா், மண்டல குழுத் தலைவா் கே.டி.ஆா்.தனசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.