நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகள் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுப்பது குறித்து சாா்-ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம், வீராகவுண்டனூா், முகமதாபுரம், நந்திபெண்டா, கிட்டப்பையனூா், பையனப்பள்ளி உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில், வெலகல்நத்தம், பையனப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள கூட்டுச் சாலையின் இருபுறம் அடுத்தடுத்து அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் மற்றும் சாலை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கிலும், எதிா்திசையில் வரும் வாகனங்களாலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தைத் தடுக்க மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலகல்நத்தம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வரதராஜன் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தம் பகுதியில் விபத்து ஏற்படும் இடங்களை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் டிஎஸ்பி விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள் மங்கையா்க்கரசி, ராணி, சுங்கச்சாவடி மேலாளா் மணிகண்டன், உதவிப் பொறியாளா் லிவிங்ஸ்டன், ஊராட்சித் தலைவா் ராமன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதேபோல், ஆத்தூா்குப்பம் பகுதியில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.