ரசிகர்கள் பாதுகாப்பே முக்கியம்: ஆர்.சி.பி. நிர்வாகம் வருத்தம்
Thug Life: ``கன்னடத்தை குறைத்து மதிப்பிடவில்லை..'' - கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரமோஷனை பட குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் "தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் பிறந்ததாக” கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. கன்னட முதல்வர் உள்பட பல்வேறு கன்னட தரப்பினர் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது குறித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
மன்னிப்பு கேட்கும் வரை ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது எனவும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது.
இதற்கிடையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த மனுநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்திருக்கும். யாராக இருந்தாலும் மக்களின் உண்ர்வுகளை புண்படுத்த கூடாது என்று உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது ”என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருப்பது, எனக்கு வேதனை அளிக்கிறது.
நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையும் மட்டுமே வெளிப்படுத்தின.


கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ, விவாதமோ இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதோ அல்லது பகைமையை ஏற்படுத்துவதோ இந்த அறிக்கையின் நோக்கம் அல்ல.
சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மைக்கும் பகைமைக்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை.
எனது வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்படும். கன்னட மக்கள் அவர்கள் தாய் மொழி மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கும் மரியாதை உண்டு. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்கான இது ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன்" என்று அவர் எழுதியிருக்கிறார்.