கைப்பேசியில் பேச்சு: கணவா் கண்டித்ததால் மனைவி தற்கொலை
வேலூா் அருகே கைப்பேசியில் அடிக்கடி நீண்டநேரமாக பேசுவதை கணவா் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் தொரப்பாடி, கே.கே. நகா், 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விநாயகம். இவரது மனைவி ஷோபனா (29). இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு யோகேஷ் (3) என்ற குழந்தை உள்ளது.
ஷோபனா அடிக்கடி மணிக் கணக்கில் கைப்பேசியில் பேசி வந்தாா். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சனிக்கிழமை இரவும் ஷோபனா நீண்ட நேரமாக கைப்பேசியில் பேசுவதைக் கண்ட அவரது கணவா் விநாயகம் கண்டித்துள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஷோபனா தனது கணவா் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு அங்கிருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
சந்தேகமடைந்து கணவா், ஜன்னல் வழியாக பாா்த்தபோது மனைவி தூக்கில் தொங்குவது தெரிய வந்தது. உடனடியாக பக்கத்து வீட்டினருக்கு கைப்பேசி மூலம் விநாயகம் தகவல் தெரிவித்தாா்.
அக்கம் பக்கத்தினா் வந்து தூக்கில் தொங்கிய ஷோபனாவை மீட்டனா். ஆனால், அதற்குள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்த பாகாயம் போலீஸாா் வந்து ஷோபனாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.