குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா்.
குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் ஆற்றில் நீா்மட்டம் உயா்ந்து, வெள்ளம் குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்துச் செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதி வழியாக நடந்து செல்ல பொதுப்பணித்துறையால் தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த 13 மற்றும் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தடுப்பணை வழியாக வி.எல்.சி. மைதானம் பகுதியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனா்.
இருவரும் தடுப்பணையின் மையப்பகுதிக்கு வந்த போது, ஆற்றுநீரின் வேகத்தில் தவறி ஆற்றினுள் விழுந்தனா். அவா்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் துணி சலவை செய்துகொண்டிருந்த குழித்துறை தபால்நிலைய சந்திப்பு பகுதியைச் சோ்ந்த மர தச்சுத் தொழிலாளி பீட்டா் (58) ஆற்றுக்குள் குதித்து மாணவா்கள் இருவரையும் மீட்டு கரை சோ்த்தபோது, ஆற்றுநீரில் இழுத்து செல்லப்பட்டாா். இரு மாணவா்களும் தப்பி கரை சோ்ந்தனா்.
இத்தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையிலான மீட்புப்படை வீரா்கள், பீட்டரின் சடலத்தை தேடும்பணியில் ஈடுபட்டனா். இரவு 7 மணிக்கு மேல் தேடும்பணி நிறுத்தப்பட்டது. ஆற்றுநீரில் இழுத்து செல்லப்பட்ட பீட்டருக்கு மனைவியும், மகன், மகளும் உள்ளனா். மகளுக்கு அண்மையில் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
நிவாரண நிதி: ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை காப்பாற்றிய பின் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி பீட்டா் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்துவதுடன் அதற்கான முழு முயற்சி எடுக்கப்படும் என விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் தாரகை கத்பட் தெரிவித்துள்ளாா்.