பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி
சென்னை: பாமக அலுவலக முகவரியை கட்சித் தலைவர் அன்புமணி மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பாமகவில், கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு வெடித்து விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அன்புமணி வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, சென்னை, தி.நகரில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி மாற்றியுள்ளார் என்று தெரிகிறது.
சோழிங்கநல்லூரில் இன்று இரண்டாவது நாளாக பாமக மாவட்டச் செயலளர்கள் உள்ளிட்டோருடன் அன்புமணி பேசி வருகிறார்.
அதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டி. நானே தலைவர். கட்சி யார் சொத்தும் கிடையாது. பொதுக்குழு தேர்ந்தெடுத்த, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த தலைவர் நான்தான் என்று அன்புமணி திட்டவட்டமாகப் பேசி வருகிறார்.
நேற்றும், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பேசிய அன்புமணி, கட்சியின் தலைவர் நானே என்றும், பாமக பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு தான் அளிக்கும் கடிதமே செல்லும் என்றும், கட்சியின் பொதுக்குழு தனக்கு ஆதரவாகவே இருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.