தென் கொரியா: தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!
தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் இன்று (பிப்.1) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 வது தளத்தில் இன்று (பிப்.1) காலை 8.40 மணியளவில் (கொரியா மணிக்கணக்கில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த தீயானது 4வது தளத்திற்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மதியம் 12.30 மணியளவில் (கொரியா மணிக்கணக்கில்) தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில் அருங்காட்சியகக் கட்டடத்திலிருந்து கருநிற புகை வெளியாவது பதிவாகியுள்ளது. கட்டடத்தினுள் சிக்கியிருந்த அருங்காட்சியக பணியாளர்கள் 4 பேரும் பத்திரமாக மிட்கப்பட்டனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!
மேலும், அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதினால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், மீட்புப் பணிக்காக உள்ளே சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் கொரிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் 1443 ஆம் ஆண்டைச் சேர்ந்த கொரிய மொழியின் அரிதான எழுத்துக்கள் பொறித்த பழமையான பொருள்கள் பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.