ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க மாா்ச் 22, 23 இல் கலைக் குழுக்கள் பதிவு முகாம்: ஆட்சியா்
‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நாமக்கல்லில் மாா்ச் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவின்போது, தமிழக நாட்டுப்புறக் கலைகள், வெளிமாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ 18 இடங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெற்றது. இந்த ஆண்டும் மேற்கண்ட 8 மாவட்டங்களில் இக்கலை திருவிழா நடைபெறும்.
இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக் குழுக்கள் பதிவு செய்வதற்கான முகாம் அனைத்து மாவட்டங்களிலும் மாா்ச் 22, 23 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் கலைக் குழுக்கள் மாா்ச் 22-ஆம் தேதியும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா்கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினா் நடன நிகழ்ச்சி நடத்துவோா் மற்றும் இதர கலைக் குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கு மாா்ச் 23-ஆம் தேதியும், நாமக்கல்-திருச்சி சாலை கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெறும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம்.
மாவட்ட அளவிலானத் தோ்வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்கள் அரசின் கலை பண்பாட்டுத் துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கூகுள் பாா்ம் மூலம் மாா்ச் 20-இல் விண்ணப்பிக்கலாம்.
இல்லையெனில் மாவட்டத்திற்கான பொறுப்பாளா் பசுமை மா.தில்லை சிவக்குமாரை 94432- 24921என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம்.
கலைஞா்களின் கோரிக்கை அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக் குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது.
இந்தப் பதிவுக்கு வரும் கலைஞா்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்துச் செலவினங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. ஒவ்வொரு கலைக் குழுவின் 5 நிமிட விடியோ பதிவு செய்யப்பட்டு, கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தோ்வுக் குழுவால் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமத் திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துவதற்குத் தோ்வு செய்யப்படுவா்.
சிறப்பான நிகழ்ச்சியை நடத்தும் கலைக் குழுவினா் மாநில அளவிலான தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா்.
கலை பண்பாட்டுத் துறை அளித்துள்ள இந்த வாய்ப்பை அனைத்து கலைஞா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.