சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!
பல மொழி சின்னதிரைகளில் நடிப்பது சிறந்த அனுபவம்: செளந்தர்யா ரெட்டி!
பல மொழிகளின் சின்னதிரை தொடர்களில் நடிப்பது சிறந்த அனுபவம் என நடிகை செளந்தர்யா ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் பிறந்திருந்தாலும் கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் தொடர்களிலும் செளர்ந்தர்யா முன்னணி நாயகியாக நடித்துவருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க தொடரின் மூலம் தமிழ் சின்னதிரை ரசிகர்கள் மத்தியில் பிரபலானவர் செளந்தர்யா ரெட்டி. இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். ஜனவரி 20 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், திங்கள் முதல் வெள்ளிவரை 7.30 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
இதற்கு முன்பு தெலுங்கு மொழியில், பாடமதி சந்தியாராகம் தொடரில் நடித்திருந்தார். அந்தத் தொடரும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்நிலையில், பல்வேறு மொழிகளில் நடிப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ள செளந்தர்யா ரெட்டி தெரிவித்ததாவது,
''நான் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவள். இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவள். அதனால் கன்னட மொழி எனக்கு சரளமாகத் தெரியும். இதன் காரணமாக எனக்கு முதன்முதலில் கன்னடத்தில் ராஜி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அத்தொடரின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலும் தெலுங்கில் பாடமதி சந்தியாராகம் தொடரிலும் ஒரே சமயத்தில் நடித்தேன். வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.
மூன்றுமொழித் தொடர்களிலும் முன்னணி நாயகியாக மாறியபிறகு, 'படவாய்ப்புகள் குறித்துப் பேசிய செளந்தர்யா, '
'நான் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என நினைப்பவள் அல்ல. வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி என் திறமையை வளர்த்துக்கொள்பவள். அதனால் வெள்ளித்திரையில் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். அப்படித்தான் சின்னதிரையிலும் நுழைந்தேன். சின்னதிரை வாய்ப்பு வந்தது. அதனை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டேன். அதன் விளைவு இப்போது எனக்குத் தெரிகிறது. உழைப்புக்கான ஊதியம் எங்கிருந்தாலும் கிடைக்கும்'' எனக் கூறினார்.
இதையும் படிக்க | மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!