பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ரஷிய அதிபர் புதின், நரேந்திர மோடியைத் தொடர்புகொண்டு பேசியபோது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்த அவர், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் ரஷிய வெற்றி நாளையொட்டி புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில், 'பஹல்காம் தாக்குதலில் ரஷியா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை செய்யலாம். ஒரு சர்வதேச குழு இந்த தாக்குதலை நடத்தியது யார்? என கண்டுபிடிக்கட்டும்' என்று கூறியிருந்தார்.
இதன்பின்னர் ரஷிய அதிபர் புதின், இன்று பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!