`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு
2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...
புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்துப் பேசிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புதுவை கோ.சுகுமாறன், ``1986-ம் ஆண்டு முதல் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாமலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மூடும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது கலை, பண்பாட்டுத் துறை. இந்நிறுவனத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பல மாணவர்கள் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்து எம்.பில்., பி.எச்.டி., பட்டம் பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் உள்ளனர். இந்த நிலையில் லாஸ்பேட்டையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் கட்டடத்தை வேறு துறைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
`மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடா ?’
கலை, பண்பாட்டுத் துறைச் செயலராக இருக்கும் நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ்., இதனைக் தன்னிசையாக முடிவெடுத்து செய்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர் கலை, பண்பாட்டுத் துறை சீர்கெட்டுள்ளது. தமிழ் அமைப்பினர் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதைக் கைவிட்டு, அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென கோரியுள்ளனர். ஒருபுறம் உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, மறுபுறம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட இந்நிறுவனத்தை மூடுவது கடும் கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி அரசின் இந்த ஏமாற்று வேலையை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே, புதுச்சேரி அரசு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர்களை உடனே நியமித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று கூறியிருக்கிறார்.