பெண் தற்கொலை சம்பவம்: எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் தலைமையிலான குழுவினர் நேரில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). இவர் மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டதாகக் கூறி, அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) காவல் நிலையம் முன் ஏப்ரல் 8 ஆம் தேதி களைக்கொல்லி மருந்தைக் குடித்தனர்.
இதையடுத்து, இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா ஏப்ரல் 9 ஆம் தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்ரல் 11 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் ஆகியோர் 16 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தவிர தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தமிழக மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ.3 லட்சம் பொருள்கள் அபகரிப்பு
இதனிடையே, ஆய்வாளர் சர்மிளா உள்பட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரசமரத் தெருவில் தொடர்ந்து 8 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உறவினர்கள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை நடுக்காவேரிக்குச் சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடமும் விசாரித்தனர். இதுதொடர்பான அறிக்கையைத் தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார் ரவிவர்மா.