Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!
சமீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சில தினங்களுக்கு முன்புகூட திண்டுக்கல் மாவட்டத்தில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது.
பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த ஓட்டுனர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழ, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடுகிறது. சுதாரித்துக்கொண்ட நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் நடக்கவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.

ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிற செய்திகளை அடிக்கடி காண நேர்வதால், ஓட்டுநர் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்வதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா; வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம்.
''அரசு பேருந்து ஓட்டுநர்களோ, தனியார் பேருந்து ஓட்டுநர்களோ அல்லது கார் ஓட்டுவதை தொழிலாகக் கொண்டவர்களோ, இந்த வேலையில் இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் போதுமான தூக்கமில்லாமல் நீண்ட நேரம் வண்டி ஓட்டுவதுதான்.
ஓட்டுநர்கள் பெரும்பாலும் வெளியே சாப்பிடும் சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படி தொடர்ந்து வெளியே சாப்பிடுவதும், அவை உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்துகிற உணவுகளாக இருப்பதும் இதயத்துக்கு நல்லதல்ல.

பீடி, சிகரெட், ஆல்கஹால் போன்ற பழக்கம் இருப்பவர்களுக்கு பொதுவாகவே ஹார்ட் அட்டாக் வருகிற வாய்ப்பு அதிகம். இதில், சரியான தூக்கமில்லாதது, ஆரோக்கியமற்ற உணவுகள் என்கிற வாழ்கிற ஓட்டுநர்களுக்கு மேலே சொன்ன பழக்கமும் இருந்துவிட்டால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம்.
பீடி, சிகரெட், ஆல்கஹால் பழக்கம் இருப்பவர்கள் அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது, அவர்களை வருமுன் காக்கும்.
இவற்றைத்தவிர, மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களான உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்கள் ஓட்டுநர்களுக்கு இருந்தால், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம்.
யாருக்கு, எங்கு மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டால் உடனே 108 ஆம்புலன்ஸை உதவிக்கு அழைக்க வேண்டும். உடன் CPR (Cardiopulmonary resuscitation ) என்கிற முதலுதவியை செய்ய வேண்டும். CPR என்பது இதயதுடிப்பு மற்றும் மூச்சுத் தடைப்பட்ட நபர்களுக்கு கையால் நுரையீரலை அழுத்தி, வாய் வழியாக ஆக்சிஜன் அளித்து உயிர்க்காப்பதற்கான ஒரு முதலுதவி செயல் ஆகும். இந்த முதலுதவி நடத்துனர்களுக்குத் தெரிந்திருந்தால், மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

இதயத்தில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே அறிகுறிகள் வெளிப்படும். பொதுவாக அதிகமாக வியர்த்தல், படப்படத்தல், உடல் வெப்பநிலை குறைவது, இதயம் மற்றும் மார்பு பகுதியில் வலி ஏற்படுவது, மூச்சுவிட சிரமப்படுவது போன்றவை மாரடைப்பு ஏற்படப் போவதற்கான அறிகுறிகள். சில சமயம் வாந்தி, மயக்கம், காதில் வலிகூட ஏற்படலாம்.
இந்த அறிகுறிகளை உணர்ந்தால், ஓட்டுநர்கள் உடனே நடத்துனர்களிடம் விஷயத்தைச் சொல்லி 108-க்கு போன் செய்ய சொல்ல வேண்டும். அல்லது உடனே வேறொரு வண்டியில் ஏறி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வலியைப் பொறுத்துக்கொண்டு பேருந்தை ஓட்டக்கூடாது.
மேலே சொன்ன மாதிரியான அறிகுறிகள் இல்லாமலேகூட மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால், அவர்களுக்கு வலி உணர்வு திறன் குறைவாக இருக்கும்.
இதன் காரணமாக சில நேரங்களில் மாரடைப்பால் ஏற்படும் வலியை அவர்கள் முன்கூட்டியே உணர முடியாமல் இருப்பார்கள். சிலர் இந்த வலியை அஜீரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்துக்கொண்டு, அவர்களாகவே மெடிக்கல் ஷாப்பில் அதற்கான மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.
சுய மருத்துவம் தவறு. அதுவும் இதயம் தொடர்பான பிரச்னைகளில் சுய மருத்துவம் மிக மிக தவறு. சர்க்கரை நோயாளிகள், அதுவும் ஓட்டுநர் பணி செய்பவர்கள் என்றால், மருத்துவர் ஆலோசனைபடி இதயம் தொடர்பான பரிசோதனைகளை அவ்வப்போது செய்துகொள்வது நல்லது.

மாரடைப்பைப்பற்றி ஒரு புரளி ஓடிக்கொண்டே இருக்கிறது. முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டால் காப்பாற்றிவிடலாம். மூன்றாவது முறை மாரடைப்பு ஏற்பட்டால்தான் உயிரிழப்பார்கள் என்று. ஆனால், அது தவறான கருத்து. முதல் முறை மாரடைப்பு வந்து உயிரிழப்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை மாரடைப்பு வந்து உயிர் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அது மாரடைப்பு எந்த இடத்தில் ஏற்படுகிறது, எந்த அளவில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது. பெரும்பாலும் 90% அடைப்பு ஏற்ப்பட்டால்தான் உயிரிழப்பு நிகழும்'' என்கிறார் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி.
ஓட்டுனருக்கு மாரடைப்புப் போன்ற ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் நடத்துனர்களுக்கு பேருந்தை எப்படிக் கையாள வேண்டும்; எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் போன்ற பயிற்சிகளை வழங்குகிறார்களா என்பது குறித்து தெரிந்துகொள்ள, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக, நடத்துனராக பணிபுரிகிற சிலரிடம் விசாரித்தோம்.
நடத்துனர்கள் பேசுகையில், "இதுவரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை பயிற்சியையும் தந்ததில்லை. அப்போ அப்போ யோகா பயிற்சி மட்டும் தருவாங்க. டிரைவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா பஸ்ஸை எப்படி நிறுத்தணும்னு யாரும் சொல்லித் தந்ததில்ல. டிரைவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துபோற அந்த வீடியோவை டிவி நியூஸ்ல பார்த்தோம். அதுல அந்த கண்டக்டருக்கு பஸ்சை எப்படி நிறுத்தணும்னு தெரிஞ்சதுனால பஸ்ல இருந்த அத்தன உசுரையும் காப்பாத்திட்டாரு. இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'' என்கிறார்கள் பதற்றத்துடன்.

இனிவரும் காலங்களிலாவது தமிழக அரசும், போக்குவரத்துத்துறையும் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் முதலுதவி அளிப்பது, அவசர காலங்களில் பேருந்தை எப்படிக் கையாள்வது போன்றவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும். தவிர, அவர்களுக்கு போதுமான இடைவெளியில் இலவச முழு உடல் பரிசோதனையும் செய்தால் எதிர்காலத்தில் பெரிய அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.
தமிழக அரசும் போக்குவரத்துத்துறையும் இதில் தனி கவனம் செலுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88