இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
பாஜகவா, காங்கிரஸா.. சசி தரூர் எந்தக் கட்சியில் இருக்கிறார்? - அதிருப்தியில் காங்கிரஸ் | Explained
சசி தரூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரா... பாஜக கட்சியைச் சேர்ந்தவரா என்பது சில நாள்களாகக் குழப்பமாக இருக்கிறது. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி சசி தரூருக்கு எதிராகவும், பாஜக கட்சி சசி தரூருக்கு ஆதாரவாகவும் பேசி வருகிறது.
கேரளாவின் திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக நின்று வெற்றி பெற்றவர் இவர். 2009-ம் ஆண்டு, இவர் முதன்முதலாக அரசியலில் காலடி எடுத்த வைத்தப்போதே, சசி தரூர் டிக் செய்த கட்சி காங்கிரஸ். அப்போதிருந்து இப்போது வரை காங்கிரஸ் கட்சியில் தான் நீடித்து வருகிறார்.

2019-ம் ஆண்டு பிரதமர் மோடியை கடுமையாகச் சாடி, 'The Paradoxical Prime Minister' என்ற புத்தகத்தை எழுதிய சசி தரூர், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, மத்திய அரசை 'ஆஹா... ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளினார். இது காங்கிரஸ் கட்சி மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் கூட்டாளி நாடுகளிடம் விவரிக்க மத்திய அரசு எம்.பி-களின் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவில் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் இடம்பெற்றிருந்தனர்.
அந்தக் குழுவில் பங்குக்கொள்ள தகுதியான எம்.பிக்களின் பட்டியலை ஒவ்வொரு கட்சியிடமும் மத்திய அரசு கேட்டது. அதன்படி, காங்கிரஸ் தயாரித்துக் கொடுத்த எம்.பி-களின் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெறவில்லை.
ஆனால், மத்திய அரசு அமைத்த குழுவில் சசி தரூரின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதாவது, காங்கிரஸ் தயாரித்த பட்டியலையும் தாண்டி பாஜக அரசு காங்கிரஸ் சார்பில் சசி தரூரை நியமித்திருந்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தக் குழுவின் தலைவராகவும் சசி தரூரை நியமித்திருந்தது.
காங்கிரஸின் தயாரிப்பு பட்டியல் குறித்து பாஜக, "காங்கிரஸ் கொடுத்த பெயர் பட்டியல் சரியானதாக இல்லை" என்று விமர்சித்தது. அதனால் தான், அவர்கள் சசி தரூரைத் தேர்வு செய்தார்கள் என்ற தொனியும் அதில் இருந்தது.
இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சசி தரூர், "எப்போது தேச நலனுக்காக எனது சேவை தேவைப்படுகிறதோ, அப்போது நான் அங்கே இருப்பேன்" என்று எளிதில் கடந்துவிட்டார்.

விமர்சனம்... அதிருப்தியை எல்லாம் தாண்டி, கடந்த வாரத்தில் இருந்து இந்தக் குழு வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டது.
சசி தரூர் தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் மோடிக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அதன் உச்சம் நேற்று அவர் பனாமாவில் பேசியது.
அங்கே சசி தரூர் பேசும்போது, "கடந்த 40 ஆண்டுகளாக, தீவிரவாதத்தினால் நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தோம். எப்போதும் வலியைப் பொறுத்துகொண்டு, எங்களுக்கு என்ன நடக்கிறது பாருங்கள்... எங்களுக்கு உதவுங்கள் என்று பிற நாடுகளிடம் கூறுவது சரியல்ல.
ஆனால், இப்போது சில ஆண்டுகளாக மாற்றங்கள் வந்துவிட்டன. தீவிரவாதிகள் தனது செயல்களுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துவிட்டார்கள்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த உரி தாக்குதல் மூலம் இந்தியா முதன்முறையாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி தாக்குதல் நடத்தியது. இது அதுவரை இந்தியா செய்யாதது ஆகும். கார்கில் போரின் போது கூட, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இந்தியா தாண்டவில்லை.
அடுத்ததாக, 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலின் போது, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும் தாண்டி, சர்வதேச எல்லையைத் தாண்டினோம். பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகளின் தலைமையகத்தைத் தாக்கினோம்.
இப்போது இதையும் இந்தியா தாண்டியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லையை தாண்டி, பாகிஸ்தான் பஞ்சாப்பில் உள்ள தீவிரவாத முகாம்கள், பயிற்சி முகாம்கள், மூன்று தீவிரவாதத் தாக்குதல் தலைமையகத்தைத் தாக்கியுள்ளோம்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் எங்களது பிரதமர் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளார்" என்று பேசியிருந்தார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது சசி தரூர் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசி வந்தப் போது, 'காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு குறித்துப் பேசுங்கள்' என்று அவரிடம் அறிவுறுத்தியது காங்கிரஸ் கட்சி. இருந்தும் அவர் கேட்பதாக இல்லை. இப்போதும் எல்லை மீறி, மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்.
இவரது பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
"அன்புள்ள சசி தரூர், நீங்கள் இந்தியாவிற்கு வருவதற்குள், உங்களை பாஜகவில் சூப்பர் செய்தித் தொடர்பாளாராக அல்லது வெளியுறவுத் துறை அமைச்சராகவோ ஆக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் என்னால் பேச முடியவில்லை.
பிரதமர் மோடிக்கு முன்பாக, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் இந்தியா தாண்டவில்லை என்று கூறி உங்களால் எப்படி காங்கிரஸின் கட்சியின் பொன்னான வரலாற்றை அவமதிக்க முடிகிறது?
1965-ன் போது, இந்திய ராணுவம் பலமுறை பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளது. இது லாகூரில் இருப்பவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது.
1971-ம் ஆண்டு, பாகிஸ்தானை இரண்டாகக் கிழித்துப்போட்டது இந்தியா. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போதும் பலமுறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடந்தி உள்ளது. ஆனால், அது எதுவும் அரசியல் லாபத்திற்காக தம்பட்டம் அடிக்கப்படவில்லை.
உங்களுக்கு அள்ளிக்கொடுத்த கட்சிக்கு எப்படி உங்களால் இவ்வளவு நேர்மையில்லாமல் இருக்க முடிகிறது?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
காங்கிரஸ் கட்சி சசி தரூரின் பேச்சால் கடும் அதிருப்தியில் உள்ளது.

இதற்கு சசி தரூர் தனது பதிலை எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்...
"பனாமாவில் நீண்ட, வெற்றிகரமான நாளுக்குப் பிறகு, அடுத்த ஆறு மணிநேரத்திற்குள் கொலம்பியா பொகோடாவிற்குச் செல்ல இருக்கிறேன். எனக்கு இதைப் பற்றி எல்லாம் பேச நேரமில்லை. ஆனால், இருந்தாலும் என் மீது உள்ள கோபத்தில் பேசுபர்வர்களுக்கு சின்ன தெளிவை கொடுக்க விரும்புகிறேன்.
1. நான் தீவிரவாதத் தாக்குதல் குறித்து தான் தெளிவாகப் பேசுகிறேன்... முன்னாள் நடந்த போர்களைப் பற்றி அல்ல.
2. நான் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து தான் பேசியிருக்கிறேன். மேலும், முன்னாள் இந்திய அரசு இந்த மாதிரியான தாக்குதலுக்குப் பிறகும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையை மதித்தது என்று குறிப்பிட்டுள்ளேன்.
ஆனால், எப்போதும் போல, என்னுடைய வார்த்தைகளை சிலர் திரித்து பேசுவார்கள். ஆனால், எனக்கு உண்மையிலேயே பிற முக்கிய வேளைகள் உள்ளது. குட் நைட்".
என்ன தான் சசி தரூர் சமாதனம் பேசினாலும், காங்கிரஸ் கட்சி அவர் மீது கோபமாகத் தான் உள்ளது.
2014-ம் ஆண்டு, பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியப்போது, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் சசி தரூர்.

2020-ம் ஆண்டில், கங்கிரஸ் கட்சியின் G-23 குழுவில் இணைந்து கட்சியினுள் மாற்றம் வேண்டும் என்று தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
2022-ம் ஆண்டு, சோனியா காந்தி, ராகுல் காந்தி விருப்பத்திற்கு மாறாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து போட்டியிட்டார்.
ஆக, இவர் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் பேசுவது, செயல்களை செய்வது புதிதல்ல. இன்னும் என்னென்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!