அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பரபரப்பு புகார்!
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது.
கடந்த வாரம், 'நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம் எப்படி பொதுவெளியில் வந்தது? என்னுடைய தந்தை கடவுள். அவரைச் சுற்றி பேய்கள் இருக்கின்றன' என்று சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் கவிதா, தனது தந்தை மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரருமான சந்திரசேகர் ராவிற்கு எழுதியிருந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலானது. கவிதா பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மகளிர் பிரிவின் தலைவர் ஆவார்.

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய கவிதா தனது சகோதர் கே.டி ராமா ராவை நேரடியாக குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது...
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, நான் சிறையில் இருந்தேன். அப்போது, பாஜக உடன் பாரதிய ராஷ்டிரியா சமிதி கட்சியை இணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்கு நான் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தேன்.
காளேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தில் நடந்த முறைக்கேடுகளுக்கு சந்திரசேகர் ராவிற்கு நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு கட்சியின் தலைமை அமைதியாகவே இருந்தது. அது ஏன்?
கட்சியில் கலாச்சாரப் பிரிவின் கிழ், எனது தலைமையில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தவிர்த்து வேறு எந்த போராட்டமும் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
காங்கிரஸ் அரசாங்கத்தால், கட்சியின் தலைவர்கள் வீட்டிற்கு புல்டவுசர் அனுப்பப்பட்டது. அதுகுறித்து ஏன் பேசப்படவில்லை. சமூக வலைதளத்தில் பதிவிடுவது மட்டும் கட்சியை வலுபடுத்தாது. வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சொந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு எதிராகப் பணம் கொடுத்து ஒருவரைப் பேச வைப்பதில் என்ன லாபம்? கட்சியில் எம்.எல்.சி பதிவியில் இருந்து விலக நான் கடிதம் கொடுத்தப்போது, சந்திரசேகர் ராவ் தான் தடுத்தார்.

நான் கட்சியில் ஓரங்கட்டுப்படுகிறேன். சந்திரசேகர் ராவைத் தவிர, வேறு எந்தத் தலைமையின் கீழும் நான் பணிப்புரிய விரும்பவில்லை" என்று பேசியுள்ளார்.
கே.டி ராமா ராவ் தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஆக உள்ளார். இவர் முன்னாள் அமைச்சரும் கூட. கவிதா பெயரைக் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியது முழுக்க முழுக்க அவரது சகோதரரைத்தான்.
ஏற்கெனவே, சந்திரசேகர் ராவ் பாஜகவின் 'பி டீம்' என்று கூறப்பட்டு வரும் நிலையில், கவிதாவின் குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.