Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்...
`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!
அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்பியது தொல்லியல் துறை. இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய தொல்லியல் துறையின் விளக்கம்
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை தற்போது விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
"கீழடி அகழ்வாய்வு ஆய்வறிக்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் குறித்த இந்திய தொல்லியல் துறையின் தெளிவுரை இது.

இந்திய தொல்லியல் துறை அகழ்வாய்வு அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் ஏகப்பட்ட முயற்சிகள் மற்றும் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், ஆய்வறிக்கைகள் மிகக் கவனமாக வெளியிடப்படுகிறது.
கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறைக்கு விருப்பமில்லை என்கிற செய்தி சமீப காலமாகப் பரவி வருகிறது. இதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்.
கீழடி ஆய்வறிக்கை உள்ளிட்ட இந்திய தொல்லியல் துறை வெளியிடும் ஒவ்வொரு ஆய்வறிக்கையும், வெளியாவதற்கு முன்பு நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். அப்படி ஆய்வு செய்யப்படும்போது, எதாவது மாற்றம் இருந்தால், அதை மாற்றச் சொல்வது இயல்பு தான். இதை செய்தி நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்".
அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை
அமர்நாத் ராமகிருஷ்ணன் 2014-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை தான் கீழடியில் செய்த ஆய்வை அறிக்கையாக 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்பித்தார். அது 982 பக்க ஆய்வறிக்கை ஆகும்.
அதில் சில மாற்றங்களை செய்து மீண்டும் சமர்பிக்கும் படி, கடந்த வாரம் இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது.
ஆய்வறிக்கையில் என்ன பிரச்னை?
தனது ஆய்வறிக்கையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிடப்பட்டுள்ள காலங்களுக்கு சரியான பெயர் தர வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு BCE முதல் ஐந்தாம் நுற்றாண்டின் BCE வரை சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமர்நாத் ராமகிருஷ்ணனின் பதில் என்ன?
இந்திய தொல்லியல் துறை கூறிய மாற்றத்தை மறுத்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த மே 23-ம் தேதி பதில் அளித்திருந்தார். தனது ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தான் குறிப்பிட்டுள்ள காலங்கள் அனைத்துமே இந்திய தொல்லியல் துறையால் ஒத்துக்கொள்ளப்பட்டவை தான் என்பதே அந்தப் பதில்.