5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்
இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்காதான் காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!
வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மூலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் 4 நாள் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய - பாகிஸ்தான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், இரு நாட்டு மோதல் குறித்து மட்டுமே அமெரிக்கா ஆலோசித்ததாகவும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.
டிரம்ப்பின் தொடர் கருத்து பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசிடமும் பிரதமர் மோடியிடமும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப்,
"நான் மிகவும் பெருமைப்படும்படியான ஒப்பந்தம் என நினைப்பது இந்தியா - பாகிஸ்தானுடனான ஒப்பந்தம்தான். தோட்டாக்கள் மூலமாக நடைபெற்ற போரை நாங்கள் வர்த்தகம் மூலமாக நிறுத்தினோம். வழக்கமாக அவர்கள் போரின் மூலமாக பிரச்னைகளை கையாள்கிறார்கள். நாங்கள் வர்த்தகம் மூலமாக கையாள்கிறோம். அதனால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோசமான போர் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது இரு நாடுகளும் அமைதியாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையிடும் நாடுகளுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது. அவர்கள் புரிந்துகொண்டதால் போரை நிறுத்தினார்கள்" என்று பேசியுள்ளார்.
டிரம்ப்பின் இந்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி, பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது எப்படி? என பிரதமர் மோடியின் சிறந்த நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப், கடந்த 21 நாள்களில் 10 ஆவது முறையாக பேசியிருக்கிறார். பிரதமர் மோடி இதுபற்றி பேசுவது எப்போது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க |சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?