US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார்.
'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.' என்று இதற்கு ஏகப்பட்ட காரணங்களை ட்ரம்ப் அடுக்கினார்.

இந்த வரி விதிப்பை ட்ரம்ப் அரசு 'அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் தான் உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் அடுத்த 90 நள்களுக்கு இந்தப் பரஸ்பர வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உடன் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருள்களுக்கும் கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. இது தற்போது நடைமுறையில் தான் உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
ஆக, இந்த வரி விதிப்புகள் பிற நாடுகளை மட்டுமல்லாமல், அமெரிக்கவையும் பாதிக்கும் என்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'இறக்குமதி வரி விதிப்பை ட்ரம்ப் மட்டுமே முடிவு செய்ய முடியாது. காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) உத்தரவிட்டது. மேலும், இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்கு ட்ரம்ப் அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது.

தீர்ப்பு தற்காலிக நிறுத்தம்!
இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், 'இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, இறக்குமதி வரி விதிப்பிற்கு விதிக்கப்பட்ட ரத்து நிறுத்தப்படுகிறது' என்று கூறியுள்ளது.
இது தற்காலிக நிறுத்தம் தானே தவிர, நிரந்தரமானது அல்ல. இந்த வழக்கின் விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பு வரும்போது தான் ட்ரம்பி-க்கு வெற்றியா என்பது தெரியவரும்.