அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!
சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களுக்கு ஹிந்திப் பாடல்கள் வேண்டாம், எங்களுக்கு வேண்டும் என்றால் ஹிந்தி கற்றுக் கொள்கிறோம், ஹிந்திப் பாடல்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால், அகில இந்திய வானொலியில் இரவு நேரத்தில் வழக்கம் போல தமிழ் பாடல்களை இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் இருந்துகொண்டு நாங்கள் ஏன் ஹிந்திப் பாடல்களைக் கேட்க வேண்டும் என தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அகில இந்திய வானொலியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5.45 மணி வரை தமிழ் ஒலிபரப்புகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன. இது தமிழ் நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை 101.4 உள்ளிட்ட வானொலிகளில் இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க தில்லியிலிருந்து ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இரவு நேரத்தில் பயணம் செய்வோர், வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், வானொலியில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்வது வழக்கம்.
இதுபோன்றவர்கள், இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று தமிழ் நேயர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.